செவ்வாய், 17 ஜனவரி, 2017

இறைவழி மருத்துவம் பயனளிக்க இறைவனை பிரார்த்திப்பது எப்படி?
நோய்களுக்கு ஒரே காரணம் உள்ளமே ! எவ்விதம் உள்ளத்தின் நோயை                          நீக்குவது ?
                                              டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்   MBBS DV MD PhD (Acu)
             இறைவழி மருத்துவம் மனதின் தூய்மையைக் கொண்டும், அதிலுள்ள உண்மையைக் கொண்டும் நிகழும் நிகழ்ச்சி. மனதிற்கும், உடல் இயக்கங்களுக்கும் இடையே உயிர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிர் இன்றி உடலும் இல்லை; உயிர் இன்றி உடல் உறுப்புக்களும் இல்லை; உயிர் இன்றி உடல் உறுப்புக்களின் இயக்கங்கள் அனைத்தும் மரணித்து விடும். மரணம் என்பது படிப்படியாக நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய உயிரோட்டத்தின் பாதிப்பு. வயதாகிக் கொண்டு வருவது மரணத்தின் அடையாளம்.
                  உயிரைப் பாதுகாக்க வேண்டுமா ? அல்லது உடலைப் பாதுகாக்க வேண்டுமா ? உங்களுடைய பதில் நிச்சயமாக உயிர் என்பதாகத்தான் இருக்கும். ஆனாலும், பெரும்பாலானோர் மனதில் இந்தக் கேள்விக்கு பெரும் குழப்பமே இருக்கும். உடல்தானே உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது?’ என்ற கேள்வியும் அவர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கும். இங்கு நீங்கள் சிந்தித்து, தெளிவாக அறியுங்கள். உயிர் இல்லாமல் கருவறையிலிருந்தே உடல் உருவாகியே இருக்காது. குழந்தை கருவிலேயே இறந்து வெளியாகி இருக்கும். ஒரு சிறு அணுவிலிருந்து ஆறடி மனிதாக அந்த உயிரோட்டத்தின் காரணமாக நாம் வளருகின்றோம். உயிரைப் பாதுகாக்கும் காலமெல்லாம் நிச்சயமாக உடல் உறுப்புக்களுக்கு பாதகம் ஏற்படாமல் அவை முறைப்படியும், ஒழுங்காகவும் இயங்குவதற்கு உரிய வழியாக அமையும்.
      பெரும்பாலும் மருத்துவர்களால் அவர்களுடைய வெளிப்படையான அறிவைக் கொண்டு மட்டுமே நாம் அறிவாகப் புகட்டப்பட்டிருக்கின்றோம். இதனை மருத்துவ அறிவு என்றும் நமக்குள் பெருமையும் இருக்கிறது. எவ்வளவு படிக்கின்றோமோ அந்த அளவுக்கு அறிவு படைத்தவர்கள் என்று பொய்யை உண்மையாக ஆக்கிக் கொண்டு வீண் பெருமையுடன் வாழ்கின்றோம். உடலை பாதுகாத்துக் கொண்டால் சுகத்தோடு வாழலாம் என்று போதிக்கப்பட்டுள்ள நம்முடைய அறிவு உண்மையா ? அல்லது பொய்யா ? உயிர் இல்லாமல் உடல் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டால் இதற்கு மீண்டும் விளக்கம் தேவை இருக்காது. உயிர்தான் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அதிலிருந்து விளையக் கூடிய உடலுறுப்புக்களும், இயக்கங்களும் தானாகவே சீராக அமையும் இல்லையா?
      ஆனால், மருத்துவமுறைகள் அனைத்தும் உயிரைத் தவிர்த்து ஒரு மனிதனை உயிரற்ற ஜடப் பொருளாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது. மருந்துகளையும், விஷங்களையும் கொடுத்து, இயங்கும் உறுப்புக்களை இன்னமும் உயிருடன் இருக்கக் கூடிய உறுப்புக்களுக்கு கொடிய பாதகங்களை அம்மருத்துவங்கள் கொண்டிருக்கின்றன. மீண்டும் சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் வாழ்வதற்கு உயிர் வேண்டுமா ? உயிர் இருந்தால் மட்டுமே வாழக் கூடிய உடல் வேண்டுமா?  உங்கள் உடலுறுப்புகள் சீராக இயங்குவதற்கு அதற்குரிய உயிரோட்டம் வேண்டுமா? அல்லது சாதனங்களை வைத்துக் கொண்டு உடலுறுப்புக்களை இயக்கி உயிரைப் பாதுகாப்போம் என்று கூறக் கூடிய மருத்துவம் வேண்டுமா? ஆனாலும், மருத்துவங்களை குறிப்பாக அலோபதி மருத்துவத்தை உயிர் மருத்துவமாக எண்ணிக் கொண்டிருக்கின்றோமே இந்த மாபெரும் கேட்டிற்கு காரணம் என்ன? நம்முடைய மனதில் கேடுகள் புகுத்தப் பட்டிருக்கின்றன. சத்தியத்திற்கு பதிலாக அசத்தியத்தையே நாம் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதைவிட இன்னும் மோசமானது கேட்பதையெல்லாம் உண்மை என்றும், ‘எவ்வளவு பெரும்பான்மையினரான மக்கள் எந்த வழியில் இருக்கின்றார்களோ அதுதான் உண்மையோ?’ என்று சிந்தனையின்றி பின்பற்றக் கூடிய மந்தைகளைப் போன்ற மக்களாகவும் நாம் ஆகி விடுகின்றோம்.
                                  நம்முடைய நிலைமை இப்பொழுது என்ன என்பதை விளங்கிக் கொண்டால், இந்த நாளிலிருந்து நம்முடைய உயிரோட்டத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாக உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் அதற்குரிய அமைப்பில் நடக்கும். நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப் பட்டவர்களாவோம். இன்னும் ஒரு உண்மையையும் நாம் அறிய வேண்டும். உயிருக்கென்று ஒரு காலத்தவணை உண்டு. அந்தக் காலத்தவணையின் மீது உயிரோட்டம் குறைந்து, நிச்சயமாக குறிப்பிட்ட நேரத்தில் நம்மை விட்டும் உயிர் பிரியும்; உடலும் அழியும். இதில் எத்தகைய சந்தேகமும் இருக்கக் கூடாது.
      ஒவ்வொருவருக்கும் ஒரு குறித்த காலத்தவணை உண்டு. அதுவரையில் இந்த உலகத்தில் அவர்களுக்கு வாழ்க்கையும் உண்டு. உயிரை பாதுகாத்து வாழ வேண்டிய வாழ்க்கை மட்டும்தான் முக்கியமே தவிர, ‘உடலை பாதுகாத்து வாழ்வேன் என்று கூறுவது எந்தவொரு நியாயத்திற்கும், சத்தியத்திற்கும் ஏற்புடையது அல்ல. இதற்கு மாறாக, நம்முடைய மனங்களில் நம்முடைய அறிவாகக் கொண்டிருக்கின்றோமே, இதற்கு என்ன பதில் கூறப் போகின்றீர்கள்? அறிவு என்றா? அல்லது இதுவரையில் மடத்தனமாக இருந்து விட்டோம் என்றா? ஒவ்வொருவரும் தனக்கு மருத்துவ அறிவு இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றோமே, இதை விட வழிகேடு ஒருவருடைய மனதில் வேறு என்ன இருக்க முடியும்?
           இப்பொழுது உங்களுடைய மனதில் அப்படியானால் மருந்துகளோ, மருத்துவங்களோ எடுக்கவும் கூடாது. பார்க்கவும் கூடாது என்று கூறுகிறீர்களா?’ என்று கேட்பீர்கள். இதற்கான பதிலையும் பிறர் சொல்லித்தான் நீங்கள் பின்பற்றுவீர்களா? அல்லது உங்களுடைய சுய அறிவு இந்த நிமிடம் உங்களை விழிப்படையச் செய்ய வேண்டுமா? நிச்சயமாக சுயமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்றால் தவிர, அடுத்தவர்களுடைய பதிலைக் கொண்டு நாம் வாழத் தலைப்படுவது  எந்தவிதத்திலும் உங்களுடைய மனதிற்கு சுகம் அளிக்காது. மீண்டும் மனிதர்களுடைய அறிவைப் பின்பற்றி பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கைதான் உண்மையோ?’ என்ற குழப்பங்களுடன்தான் வாழ வேண்டியிருக்கும். இவ்விதமாக குழப்பங்களுடன் வாழ்வது கொலையை விடக் கொடியதாகும்; தற்கொலைக்கு சமமானது.
       நம் மனதில் இருக்கக் கூடிய குழப்பங்களுக்கும், சுய அறிவைக் கொண்டு தெளிவான நீரோட்டமாக இருக்கக் கூடிய மனதிற்கும் உள்ள வித்தியாசம் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் இந்த நேரத்தில் சிந்தியுங்கள். தொடர்ந்து பிறகு படிக்கலாம். இதுவரையில் படித்ததை நீங்கள் சிந்தியுங்கள். இதிலுள்ள உண்மை எந்த அளவு உங்களுடைய இனி வரக் கூடிய வாழ்க்கையை சுகமான அனுபவங்களில் அமைக்கும் என்பதை அறிய முயலுங்கள். இது ஒரு அழகான முடிவை நோக்கி உங்களை சிறப்பான பதிலைக் கொண்டு வழி நடத்தும். இது சுகமான வாழ்க்கையினுடைய பாதை.
       வாசகர்களே, நாம் இப்பொழுது உடலையும், உடலுறுப்புக்களையும் மறக்கிறோம். மறக்கத்தான் வேண்டும். உருவங்கள் அனைத்துமே உயிரோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டு, பின்னர் ஒரு படைப்பாக வெளிப்படுத்தப் பட்டு, அதன் பின்னர் உயிரோட்டமுள்ள ஒரு உயிரினமாக வாழ ஆரம்பிக்கிறது என்பது சத்தியம். இதில் நீங்கள் மறுப்பதற்கு ஏதேனும் உண்டா? ‘சிந்தனையில் குழப்பங்கள் நீங்கும்என்பதை நாம் அறிவோம். நாம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, சிந்தனையின் பாதையில் மட்டும்தான் இருக்கின்றோமே தவிர, ஊர் உலகத்தை பின்பற்றக் கூடிய குழப்பங்களில் இல்லை. ஊர் உலகத்தைப் பின்பற்றுவது ஷைத்தானுடைய சூழ்ச்சிகளில் உள்ளது.
     ஷைத்தானின் சூழ்ச்சி என்னவென்றால், உங்களை கேள்விகளைக் கொண்டே அவன் வழி கெடுக்கின்றான். ஒருவருக்கு சொல்லிக் கொடுப்பதும், கேள்விகளைக் கேட்டு அவர்களுடைய பதிலைக் கொண்டே விளங்க வைப்பதும் ஆகிய இரண்டு வித்தியாசமான வழிமுறைகள் உண்டு. இந்த இரண்டு வகைகளில் எது மனதில் வேகமாகப் பதிந்து, அவர்களை வழிநடத்தும் என்பதையும் இப்பொழுது நீங்கள் நிறுத்தி, நிதானமாக உணர வேண்டும். தொடர்ந்து படிப்பதை பிறகு பார்க்கலாம். உங்களுடைய பதில் மேற்சொன்ன இரண்டு வழிவகைகளில் எது என்ன வகையிலான வழியைக் காட்டும் என்பதை நாம் பார்ப்போம்.
      பிறர் சொல்லிக் கொடுக்கும் பொழுது, சுய அறிவு தடுக்கப்படுகின்றது; சுய அறிவுக்கு வேலை இல்லாமல் ஆக்கப்படுகின்றது. அவர் சொல்லிக் கொடுத்ததை எந்த சிந்தனையும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கொள்கின்றார். சொல்லிக்  கொடுக்கக் கூடியவற்றில் எது உண்மை? எந்த அளவு பொய் கலந்திருக்கிறது என்பதை யோசிப்பதற்கு மனதில் இடமே கொடுக்காமல் வலுக்கட்டாயமாக போதிப்பது பெரியவர்களுடைய வழக்கமாக இருக்கிறது. இன்னும் பெரும்பாலான மக்களின் போக்குகளாகவும் இருக்கிறது. உதாரணமாக கடவுளை கும்பிட வேண்டும் என்று தன்னுடைய குழந்தைகளை பெற்றோர்கள் கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் அழைத்துச் செல்கின்றார்கள். அங்கு குழந்தைகள் பெற்றோர்களிடம் கடவுளைப் பற்றி எண்ணற்ற கேள்விகளைக் கேட்கும். இதனை ஒவ்வொரு பெற்றோரும் தெளிவாக ஞாபகம் கொள்ள முடியும். ஒரு கேள்விக்காவது அவர்களுக்கு பதில் தெரிந்திருக்குமா? நிச்சயமாக கிடையாது. ஏனென்றால், அவர்களும் சொல்புத்தியின் காரணமாக புகட்டப்பட்டு இதுதான் வாழ்க்கை என்று, எந்த சிந்தனைக்கும் இடமில்லாமல் கடவுளை வணங்குகின்றோம் என்ற அடிப்படையில் பயிற்றுவிக்கப் பட்டவர்களே. அவ்விதமே, தங்களுடைய குழந்தைகளிடத்திலும் அவர்களுடைய கடவுளைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் கொடுக்க வழியில்லாமல், ‘ரொம்ப கேள்விகள் கேட்கக் கூடாது; அது தெய்வ குற்றம் என்று மட்டுமே கூறத் தெரியும். அந்த குழந்தைகளுடைய சிந்திக்கும் திறன் அங்குதான் நிர்மூலமாக்கப்படுகிறது. இவ்விதமாக ஒரே மனித சமுதாயம் பிளவுபட்டவைகளாகவும், உதிரிகளாகவும், மனித சமுதாயத்திற்கே கேடாக ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்திற்கு பகைமையும், விரோதமும் கொண்டவைகளாகவும் பயிற்றுவிக்கப் பட்டு விட்டன. இப்பொழுது பிளவுபட்ட உதிரிகளான, இன்னும் எதிரிகளான நம்மை நாமே ஒருவர் மற்றவரை அழித்துக் கொள்ளக் கூடிய பகைமையைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுதான் ஆரம்ப குழப்பம். ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியில் கண்ட வெற்றி.
          இப்பொழுது ஷைத்தானுடைய சூழ்ச்சி வலையிலிருந்து நாம் விலக வேண்டும். நம் மனம் ஒரே சமுதாயமாக மனித சமுதாயத்தை கருத வேண்டும். நிச்சயமாக கடவுள்தான் அனைவரையும் படைத்தார். இதற்கு உங்களுடைய பதில் என்ன? இல்லை என்பீர்களா? ஆம் என்பீர்களா? இது கேள்விகளைக் கேட்டு பெறக் கூடிய விடை ஆகும். இதன் காரணமாக உங்களுடைய சுய அறிவு உயிர் பெறுகிறது. அதாவது, எது சத்தியம் என்பதை அறியக் கூடிய விதத்தில் உங்களுடைய உயிரோட்டம் படைக்கப் படுகிறது. அறியுங்கள், உங்களுடைய உயிரோட்டம் படைக்கப் படுகிறது என்பதை மீண்டும் அறியுங்கள்.
      இப்பொழுது நாம் கடவுளைப் பற்றி கேள்விகளைக் கேட்கின்றோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இம்மூன்று பிளவு பட்ட பிரிவினரையும் பொதுவாகக் கேட்கின்றோம். இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் பொழுது, மூன்று பிரிவினர்களாக முடியாது. நிச்சயமாக குழப்பங்களிலிருந்து நாம் விலகி, ஒரே சமுதாயமாக, புதிய சமுதாயமாகப் படைக்கப் படுவோம்.
 கேள்விகளுக்கு வருவோம்.
 கடவுள் யார்? உங்கள் பதில் என்ன? கடவுள் என்பவர் மகாசக்தி; அவர் எங்கும் இருக்கிறார்.
  அப்படியென்றால், அடுத்த கேள்வி, கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், எதற்காக கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள்? உங்கள் பதில் என்ன? நிச்சயமாக இதற்கு பதில் அளிக்கும் பொழுது,  உங்களுக்கே தெரியும் உங்களிடம் குழப்பங்கள் உள்ளன என்று. தெளிவான பதிலை உங்களால் கூற முடியாது. நிச்சயமாக இந்தக் கட்டிடங்களுக்குள் போக வேண்டியதே அவசியம் இல்லை; கூடவும் கூடாது என்பதுதான் தெளிவான உண்மை. இந்த உண்மையை நீங்கள் நிச்சயாக வெறுப்பீர்கள்.
    அதாவது, கோவில்களிலும், மசூதிகளிலும், சர்ச்சுகளிலும் கடவுள் இல்லை என்று கூறுவதையும், ‘அதன் காரணமாக செல்லவே கூடாது என்ற அந்த சத்தியத்தையும் நீங்கள் திடனாக வெறுப்பீர்கள். இப்பொழுது நம் நிலை என்ன? பொய்யை சத்தியம் என்றும், சத்தியத்தை அது கூடாது என்று வெறுப்பதும் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? இது ஓரு உதாரணம். இதைப் போன்றே இனி ஒவ்வொரு வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளிலும் இதே நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டு வாழ வேண்டியிருக்கும். இன்று நம்முடைய நிலை இந்த வகையிலான வாழ்க்கையைத் தவிர இல்லை. ஆனாலும், சிலர் இவற்றை சிந்தித்து, உணர்ந்து நாத்திகர்களாக இருக்கின்றார்கள். இவர்களும் ஒரு கூட்டமாக இருப்பதன் காரணமாக ஒருவர் பிறர் சொல்லைக் கேட்டு, அது ஒரு சமுதாயமாகவும் ஆகி விட்டது. நமக்கு நல்லறிவையும், நற்சிந்தனையையும் புகட்டுவது சிந்தனைக்குரியதாக படைக்கப்பட்டுள்ள நம்முடைய மனம். அரூபமான மனம் என்ற அமைப்பை படைத்தவன் இறைவன். தன்னைப் பற்றி அறிவிப்பதற்காகவே அந்த மனதைப் படைத்தான். அந்த மனதை நாம் இதுவரையில் சிந்தனைக்குட்படுத்தி இறைவனுடைய ஞானங்களைக் கொண்டு விளங்கி வாழ்வதற்கான வழியைப் பெறாமல் அலட்சியப்படுத்தியதின் விளைவு பெரும் மந்தைகளைப் போன்ற கூட்டங்களாக ஆகி விட்டோம்.
            இந்த நிலை தொடருமானால், கடவுளைப் பற்றிய சிந்தனை நம்முடைய மனதில் நிகழ்ந்து கொண்டிருக்க, அதாவது, அந்த மகாசக்தியே நம்முடைய உணர்வாக இருக்கும் பொழுது, அதனை கோவிலாக மதித்து, அங்குள்ள சத்தியத்தை பூஜிக்காமல், தெய்வ இல்லங்கள் என்று நம்முடைய கற்பனைகளைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டிக் கொண்டு மனதை விட்டும் வெளியேறி விடுகின்றோமே, இனி நமக்கு இறைவனுடைய துணையும் இல்லை; இறை வழிகாட்டுதலும் இல்லை என்பதை அறிய வேண்டாமா? சொல் புத்தியில் வாழக் கூடாது. எந்த கேள்வியையும் உங்களுடைய இருதயங்களில் கேளுங்கள். அங்கு இறைவனுடைய நேரிடையான, நேர்வழிக்கான தெளிவு உண்டு. அதனைப் பின்பற்றினால் தவிர, நம்முடைய உயிரோட்டம் நிச்சயமாக குழப்பங்களில் ஆகி பாதிக்கப் படும்.
        'இறைவன்தான் ஆதியும் அந்தமும்' என்ற சத்தியத்தை மனிதனாக இருக்கக் கூடிய ஒவ்வொருவருடைய மனதிலும் இறைவன் அமைத்திருக்கின்றான். அந்த சத்தியத்திற்கே நாம் புறம்பாகிய பிறகு, அலட்சியப் படுத்திய பிறகு, நாம் தெளிவான இறைவனுடைய விரோதியாக ஆகி விட்டோம் என்பதை நாம் அறிகிறோம். இது சுயமாக சிந்திப்பதன் காரணமாக கிடைக்கும் நல்லறிவு.
             இனி, ஆதி முதல் அந்தம் வரையிலும் நமக்கு வழிகாட்டுதல் இறைவன்தான் என்பது உண்மையாக இருக்கும் பொழுது, ஆதி முதலாக அந்தம் வரையிலும் அதாவது, ‘ஒருவருடைய வாழ்க்கை பிறக்கும் முதலாக இறக்கும் வரையில் இறைவனைத் தவிர கதி இல்லை' என்பதுதானே உண்மை? உங்களுடைய பதிலும் 'உண்மை' என்றே கூறும். அவ்விதமானால், இந்த சத்தியத்திற்கு விரோதமாக நாம் நம்முடைய மனதை விட்டும் வெளியேறி, நாம் கற்பனைகளாக கட்டிடங்களை அமைத்துக் கொண்டு, 'அங்குதான் இறைவன் இருக்கின்றான்' என்று கூறும் பொழுது,  இரண்டு குற்றங்களுக்கு நாம் ஆளாகின்றோம். ஒன்று, ' இறைவன் எங்கும் இருக்கின்றான்' என்று கூறினால், அது பகிரங்கமான பொய். அடுத்தது, ' இறைவன் மனதோடு உங்களோடு இணைந்திருக்கின்றான்' என்ற சத்தியத்தை விளங்கியிருக்கும் பொழுது, மேலும், 'உள்ளம்தான் கோவில்' என்பதையும் தெளிவாக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் நாம் மனமுரண்டாக இறைவனை நிராகரித்து, புறக்கணித்து நமக்கே அலங்கோலமாக நம் மனதை விட்டும் வெளியேறுகின்றோம். அதாவது, உள்ளமாகிய நம்முடைய இறை சந்நிதானத்தை விட்டும் வெளியேறுகின்றோம். இனி, நம்முடைய மனம் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவை அளிக்காது. அதாவது, நாம் இறைவுணர்விலிருந்தும் வெளியேறி விட்டதன் காரணமாக, ஊர் உலக மக்களின் வழிமுறைகளைத்தான் நம்புவோமே தவிர, இறைவனுடைய ஒரே பாதை நமக்கு மறுக்கப் பட்டு விடுகின்றது.
  
    அந்த ஒரு பாதைக்கு பதிலாக ஊர் உலக மக்களின் பேச்சுக்களும், வழிமுறைகளும் நம் உள்ளங்களில் நிரம்பி விடுகின்றன. கோவிலாக இருக்கக் கூடிய உள்ளம் குப்பை மேடுகளாக ஆக்கி விட்ட நிலையில்தான் நம்முடைய இறைவனை நாம் இழிவுபடுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
      உள்ளம் கெட்டுவிட்டால் மனதில் அமைதிக்கு பதிலாக கவலையும், பயமும், பதட்டமும், பீதியும் ஆகி அலங்கோலத்திலும், விரக்தியிலும் ஆகி விடாதா? இதுதானே இன்றைய மக்களின் உள்ளங்களின் நிலை? இன்னும் கோபமும், பிறரை அழித்து வாழக் கூடியதும், நய வஞ்சகத்தைக் கொண்டும், ஏமாற்றத்தைக் கொண்டும், மனித துரோகச் செயலில் ஈடுபடுவதுதான் வாழ்க்கை என்ற பாதைகளில் நாம் வகுத்துக் கொண்டதற்கும் காரணம் இதுதான். எந்த நேரத்திலும் உள்ளம் பதட்டத்திலும், விரக்தியிலும் இருக்கும் பொழுது, நமக்கு என்ன நிகழும் என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்பாக இறைவன் கூறக் கூடிய வாக்கு இதோ:
2:10 அவர்களுடைய உள்ளங்களில் நோய் உள்ளது; அல்லாஹ்   (இறைவன்) நோயை அவர்களுக்கு அதிகமாக்கி விட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்கு துன்பந்தரும் வேதனையும் உண்டு.
அவர்களுடைய உள்ளங்களில் நோய் உள்ளது …..
    இந்த சத்தியத்தை நாம் இதுவரையில் அறிந்து கொண்டிருக்கின்றோம். இது மனதின் இறைவனான அல்லாஹ்வின் (இறைவனின்) வாக்கு; இன்னும் இறுதி வரையில் உறுதியான வாக்கும் ஆகும். இனி என்ன நிகழும்? இருதயம் விரக்தியிலும், கோபத்திலும், இயலாமையிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும். அது நேரடியாக உங்களுடைய நெஞ்சங்களில் இரண்டு உறுப்புக்களையும் நீங்கள் அறியாத விதத்தில் அவற்றினுடைய இயக்கங்களில் சீர்குலைவு ஏற்படும். அவற்றின் சீராக இயக்கங்களில் குறைபாடு ஏற்படுத்தி விடும். இது உடலின் அனைத்து நோய்களுக்கும் ஆரம்பம். அந்த நோய் சிறு வயது முதலாக ஆரம்பமாகி விடும். உங்களுடைய குழந்தைகளின் ஆதி முதல் அந்தம் வரை இப்பொழுது நீங்கள் கவனிப்பவர்களாக இருக்கின்றீர்கள். 'என் குழந்தை 'துரு துரு' வென்று இருக்கின்றான்' என்று பலரும் பெருமை பேசிக் கொள்வார்கள். இதற்கு என்ன பொருள்? அந்தக் குழந்தையினுடைய உள்ளத்தில் நிதானம் இல்லை; அந்தக் குழந்தையினுடைய உள்ளத்தில் பொறுமை இல்லை; இறுதியாக அந்தக் குழந்தையினுடைய உள்ளத்தில் அமைதி கெட்டிருக்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும். இந்தக் குழந்தைகள் கோபப் படுவதும், அடம் பிடிப்பதும் நமக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பெற்றோர்களிடமே கோபமும், அடம் பிடிப்பதும் இருக்குமானால், வளர்ந்து வரும் பொழுது, யாரிடம்தான் இந்தக் குழந்தைகள் பணிவை மேற்கொள்ளும்? அடக்கத்தை மேற்கொள்ளும்? இந்த குழந்தைகளிடத்தில் இப்பொழுது நாம் 'துரு துரு' வென்று இருக்கக் கூடிய அந்த மனநிலையை அமைதிப் பூங்காவனமாக மாற்ற வேண்டும். இது பெற்றோர்களுடைய ஆத்மார்த்தமான கடமை.
    அந்த பெற்றோர்கள் குழந்தைகளிடத்தே கேள்விகள் கேட்க வேண்டும். அவர்கள் குணம் மாற வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அந்த உணர்வுகள் அவர்களுக்கு நற்குணங்களை இறைவனுடைய அருளைக் கொண்டு படைக்கும். அவர்களுடைய நெஞ்சங்கள், அந்த நெஞ்சங்களில் இருக்கக் கூடிய இருதயமும், சுவாச உறுப்புக்களும் அழகான இயற்கை அமைப்பில் இயங்கும். நோய்கள் நிச்சயமாக உருவாவதற்கு வழியில்லை.
    நம்முடைய இருதயங்களில் நாம் இறைவனை உணர்ந்து, அந்த உள்ளத்தை இறை சந்நிதானமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால் தவிர, வணக்கஸ்தலங்கள் என்று சத்தியத்திற்கு விரோதமாக ஊர் உலகத்தைப் பின்பற்றி இதுவரை வாழ்ந்தது போல் இல்லாமல் சத்தியத்தின் பால் சார்ந்து, உள்ளத்தில் இறைவனோடு இணைந்து வாழும் பொழுது மட்டும்தான் இருதயங்களிலிருந்து உருவாகும் அனைத்து நோய்களையும் விலக்குவதற்குரிய பாதைகளில் நாம் அமைவோம்.
              வாசகர்களே, உள்ளத்தின் இறைவனோடு நாம் வாழாத வரையில் நேர்வழியோ, நல் வழியோ நாம் காண முடியாது. மாறாக, நேர்வழியைத் தவிர, அனைத்து வழி முறைகளையும் நாம் கற்பிக்கப்பட்டு விடுவோம். உலகத்தை பின்பற்றுவது உள்ளத்தை சிதைத்துக் கொள்வதற்கு சமமானதாகும். இதையே இறை வாக்கு அறிவிக்கிறது; அவர்களுடைய உள்ளங்களில் நோய் உள்ளது....
    வாசகர்களே, உள்ளங்களில் நோய் என்பது உங்களுடைய உள்ளத்திலேயே அதற்கான மனத்தெளிவான வாழ்க்கைக்காகவும், உங்களுடைய சுற்றம் சூழல்களால் வாழ்வதற்குரிய அனைத்து ஞானங்களும் இருக்கும் போதிலும் அதனை நிராகரித்து வாழ்கின்றோமே, இதுவே நோய்களின் ஆரம்பம். 'நிராகரித்து வாழ்கின்றோம்' என்ற இந்த உணர்வின் போது நாம் அறிய வேண்டியது ஆதி முதல் அந்தம் வரையில் நமக்கு வழிநடத்தக் கூடிய இறைவன் ஒருவனை நாம் தவற விட்டு விட்டோம் என்பதையே. தவறுகளின் பாதிப்புக்கள் இன்று வரை நம்முடைய வாழ்க்கையில் நிகழக் கூடிய பிரச்சினைகளாகவும், உடலுறுப்புகளில் ஏற்படக் கூடிய வியாதிகளாகவும் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எந்த மருத்துவ முறையாலும் உள்ளத்தைத் தொட முடியாது. இறைவன் ஒருவனைத் தவிர உள்ளங்களில் உள்ள நோய்களை நீக்க முடியாது. உங்களுடைய உள்ளங்களை விட்டும் உங்களை வெளியேற்றி 'கட்டிடங்களுக்குள் தான் இறைவன் இருக்கின்றான்'  என்று பாதையை மாற்றிய குற்றத்திற்கு பூசாரிகளே உரியவர்கள். நமக்கு சிந்தனை என்ற நல்லறிவு இருந்தும், அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றிய குற்றமும் நம்மீது இருக்கிறது. ஆகவே, இதில் யார் முதல் குற்றவாளிகள் என்ற பேச்சு இறைவனிடம் செல்லுபடி ஆகாது. இருவருமே குற்றவாளிகள்.
     'சத்தியத்தை விட்டு விட்டு பொய்களை நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்' என்பதுதானே உண்மை? அந்தப் பொய்களின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வது எந்த அளவுக்கு மனித கூட்டங்கள் அதில் இருக்கின்றதோ, அதுதான் உண்மை என்று கூட்டங்களின் தொகையைக் கொண்டு அதிகமதிகம் பொய்யான பாதைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.
    வாசகர்களே, இருதயத்தின் நோய்களிலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எந்த நோயும் கிடையாது. ஒரே ஒரு நோயைத் தவிர. உங்களுடைய உள்ளங்களில் நோய் உள்ளது....
     இறைவனுடைய அடுத்த வார்த்தை, அல்லாஹ் (இறைவன்) நோயை அவர்களுக்கு அதிகமாக்கி விட்டான்...
     இதனுடைய பொருள்; நாம் வாழ்க்கையில் பல பல தருணங்களில், நம்முடைய வழி முறைகளில் மிக மோசமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் பொழுது, அந்தக் கணமே, அந்த பொழுதிலேயே அது நீங்கள் தெருவில் இருந்தாலும் சரி, பாத்ரூமில் இருந்தாலும் சரி 'இறைவனே! கடவுளே! தெய்வமே! என்று கூப்பிடுவீர்கள். அங்கு நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதை இப்பொழுது உணருங்கள். கடவுள் தூணிலும் இருக்கின்றான்; துரும்பிலும் இருக்கின்றான்; பாத்ரூமிலும் இருக்கின்றான்; சாக்கடையிலும் இருக்கின்றான்; தெருவிலும் இருக்கின்றான் என்பது எப்படி உண்மையென்றால், நீங்கள் எங்கிருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். நீங்கள் அவனை அழைக்கும் பொழுது, உடனே உங்களுக்கு கை கொடுக்கின்றான். நீங்கள் சமாதானத்தை அடையும் பொருட்டு. இன்னும், நீங்கள் அவனையன்றி அமைதியோ, சமாதானமோ கிடைக்கப் பெற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு. இனி, எப்படி நீங்கள் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று சத்தியத்திற்கு அப்பாற்பட்டு திரும்புவீர்கள்? ஆனாலும், நாம் இறைவனை பாத்ரூமிலிருந்து அழைத்த போது நம்முடைய அழைப்புக்கு பதில் அளித்த இறைவனை மறந்து விடுகின்றோம். மீண்டும் பொய்களின் பக்கமே நம்முடைய வாழ்க்கை தொடருகின்றது. எனவே, இறைவனுடைய வாக்கு இதோ:
  2:10  அவர்களுடைய உள்ளங்களில் நோய் உள்ளது; அல்லாஹ் (இறைவன்) நோயை அவர்களுக்கு அதிகமாக்கி விட்டான்; மேலும், அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
    வாசகர்களே, இப்பொழுது நம்முடைய நிலைமை என்ன என்பது தெரிகிறதா? நம்முடைய நோய்களிலிருந்துள்ள துன்பங்களுக்கு காரணம் என்ன என்பது புரிகிறதா? நம்முடைய குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கொண்டு மட்டுமேதான் என்பதை இப்பொழுது உணருவோமாக. நம் உள்ளத்தின் இறையுணர்வோடு ' உள்ளமே கோவில்' என்ற சத்தியத்தோடு வாழ ஆரம்பித்தால் தவிர, கட்டிடங்களுக்குள் சென்று கொண்டிருக்கும் வரையில் இறைவனுடைய அனுக்கிரஹம் இல்லை என்பதையும், நேர்வழி இல்லை என்பதையும் தெளிவாக அறிவோம்.
  அடுத்து, நம்மையும், நம் குடும்பத்தினரையும் இனி நோய்கள் தீண்டாமல் பாதுகாப்பது எப்படி என்பதை அறிய இருக்கின்றோம்.
                                                                                                                                      தொடரும்....


                                                                   நன்றி:  ஹெல்த் டைம் ஜனவரி 2017 மாத இதழ்